சுஜிதா IAS - பார்வையற்ற மாணவி - enabled.in

சுஜிதா IAS – பார்வையற்ற மாணவி

“ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்’ என்ற குறளின் கருத்துபடி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும்.

மேற்கண்ட திருக்குறளைச் சொன்னது மட்டுமல்ல அதன்படி தன் விதியினை மாற்றை அமைத்த மாற்றுத்திறனாளி, பார்வையற்ற மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ  தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

சுஜிதா IAS - பார்வையற்ற மாணவி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். இருந்தபோதிலும் மிகவும் ஆர்வமுடனும், திறமையுடனும் படித்து 10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியிலும் பி.ஏ., முடித்து உள்ளார்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சுஜிதா நம்பிக்கையுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம் எக்ஸெல் பயிற்சி நிலையத்திலும், மெயின் தேர்விற்கு சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்திலும் படித்து தேர்வுகளை எழுதினார். மெயின் தேரிவில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலிலும் இடம் பிடித்து விட்டார். மனித நேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி உட்பட பலரும் சுஜிதாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொண்டனர்.

இது குறித்து சுஜிதா கூறியபோது, “இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எனது தாய் அடிக்கடி, உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித் தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார்.என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன்” என்று கூறியதுடன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள திருக்குறளைச் சொல்லிக் காண்பித்து இந்த திருக்குறளை தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூறிக் கொள்வதுடன், தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யவிருப்பதாகவும், பணியில் ஈடுபடும் போது நம் தாய்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்காக, தன்னால் இயன்ற அரும்பெரும் பணியாற்றப் போவதாகவும் சுஜிதா மேலும் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் அல்லது சாதரமாணவராக இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கமும் ஆதரவும் அவர்களுக்குள் இருக்கும் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த உதவும் என்பதற்கு சுஜிதாவும் அவரது தாயார் ஜோதியுமே பெரிய உதாரணம்.

பிறரைத் தட்டிக் கொடுப்போம், பிறர் கைதட்டும் அளவிற்கு அவர்கள் முன்னேறுவார்கள்.

Leave a comment

Share Your Thoughts...