பார்வையாக இருக்க ஒரு வாய்ப்பு - enabled.in

பார்வையாக இருக்க ஒரு வாய்ப்பு

மனதின் அடியாழத்தையும் தொடும் ஆனந்தமான உணர்வைத் தரக் கூடிய சிலவற்றில் ஒன்று இயலாதவர்க்கு இயன்றதை செய்யும் போது அவர் முகம் வெளிப்படுத்தும் நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சி..

மாற்றுத் திறன் கொண்ட நம்மின சகோதர சகோதரிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகள் சிலவற்றை செய்ய வேண்டும் என்பதான ஆர்வம் உள்ளவரா நீங்கள்..? உங்களைத் தான் தேடிக் கொண்டிருக்கிறோம்..!! இதோ உங்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்ய ஒரு சந்தர்ப்பம். பார்வையற்ற நண்பர்கள் சிலருக்கு கொஞ்ச நேரம் அவர்களது பார்வையாக இருக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் சென்னையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளின் காலை நேரத்தில் (9:30am to 1pm) பார்வையற்றோருக்கான வகுப்புகளை நடத்துகின்றனர். தேவைப்படும் உதவி என்னவென்றால் அவர்களது பாடங்களை அவர்களுக்கு வாசித்துக் காண்பிக்க ஆர்வமுள்ள சிலர் தேவை. அவ்வளவே..!!

பெரும்பாலும் அவர்கள் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்கள். அவர்களுக்கு பார்க்கும் திறன் இல்லையாதலால் அவர்களது பாடங்களை நாம் வாசித்துக் காட்ட அதை அவர்கள் மனதில் ஏற்றிக் கொள்வார்கள். சில நேரங்களில் நாம் படிக்கும் பாடங்களை அவர்கள் ஒலிநாடாவில் பதிவும் செய்துக் கொள்வார்கள். தமிழில் ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதென்றால் தமிழ் இலக்கியங்களை படித்து தெரிந்துக் கொள்ள உங்களுக்கும் ஒரு வாய்ப்பு.

விடுமுறை நாட்களில் திரையரங்குக்கு சென்று படம் பார்க்க எவ்வளவு நேரமாகுமோ அதே அளவு நேரம் தான் இதற்கும் நீங்கள் செலவழிக்க வேண்டியது. ஆனால் படம் பார்ப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியை விட பல மடங்கு பரவசமும் சந்தோசமும் மனநிறைவும் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

நீங்கள் செய்யும் உதவியால் அவர்களுக்கு தங்கள் பாடங்களை மனதில் ஏற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு. உங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை சக இனத்தவருக்கு செய்த திருப்தி, மகிழ்ச்சி மற்றும் தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு. பார்வையற்ற அவர்களது படிக்கும் ஆர்வத்தில் ஆதரவாக உதவுவதால் உங்களுக்கு நிச்சயமாக ஒரு மனநிறைவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. பதற்றமும் கவலைகளும் நிறைந்த வாழ்க்கையிலிருந்து கொஞ்ச நேரம் உங்களுக்கு நிம்மதியான விடுதலை கிடைக்கும். உங்கள் மனது சாந்தமடையும்.

அங்கே நீங்கள் காணக் கூடிய உலகம் மிகவும் வித்தியாசமானது. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தென்றல் காற்று அவ்வப்போது உலா வரும் உலகமது. நிறைய புது நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். கருத்து பரிமாற்றலாம். அங்கே நீங்கள் செலவழிக்கும் பொழுதுகள் நிச்சயமாக திருப்தி தரும் என்பதில் சந்தேகமில்லை. எழுத்தறிவித்தவனே இறைவனாகும் போது அவ்வெழுத்துக்களை கண்டுக் கொள்ள நீங்கள் பார்வையாக இருப்பீர்களேயானால் அது எவ்வளவு மகிழ்ச்சியான உணர்வை உங்களுக்கு தரும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

வேண்டுமானால் ஒரு நாள் வந்துப் பாருங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று முயற்சித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடருங்கள். இதில் எந்த கட்டாயமும் கிடையாது. எல்லா சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் என்னால் இதை செய்ய முடியாது என்று நினைப்பீர்களேயானால், உங்களால் முடிந்த நாட்களில் மட்டும் சென்று இவ்வகுப்புகளில் வாசித்து காண்பியுங்கள். நேரடியாக அங்கு செல்ல முடியாதவர்கள் பாடங்களை ஒலிநாடாவிலோ (cassette) அல்லது மின்தட்டிலோ (cd) பதிவு செய்தும் தரலாம். நிபந்தனைகள் எதுவும் இல்லை.. ஆங்கிலத்தில் இலக்கியம் பயிலும் மாணவர்களும் கூட இங்கு வருகிறார்கள். எனவே உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக வாசிக்க வரும் என்றால் உங்களால் அவர்களுக்கும் உதவ முடியும். ஒரு நாள் வந்து தான் பாருங்களேன்!!

சனிக்கிழமை:
இடம்: பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை. [Fathima Higher Secondary School, Kodambakkam, Chennai]
நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை.

ஞாயிற்றுக்கிழமை:
இடம்: குட்வில் ஃபவுண்டேஷன், மேதா நகர், சென்னை. [Goodwill Foundation, Metha Nagar, Chennai]
நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை.

ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் இவ்வகுப்புகளை நடத்தும் நண்பர்களின் தொலைப்பேசி எண்களில் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்:
ஜோசப்: 9688644474 மற்றும் 9962054684
மணிவேல்: 9788571231
பொற்செல்வன்: 9894627109

வாருங்கள்..! புதியதொரு உலகை நம்மால் படைக்க முடியாவிட்டாலும் நாம் வாழும் இவ்வுலகிற்கு நம்மால் முடிந்த மட்டும் இனிமை சேர்ப்போம்..!!

Leave a comment

Share Your Thoughts...