மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ் - enabled.in

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ்

உடற்குறைபாடு உள்ளவர்களை உலகம் ஒதுக்கித் தள்ளிய காலங்கள் மலையேறிக்கொண்டிருக்கின்றன. கல்வி, வேலை என பலவற்றிலும் அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இப்போது மாற்றுத் திறனாளிகளுக்காகவும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வர ஆரம்பித்திருக்கிறது…

2001, மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவில் இரண்டு கோடி மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். இவர்களை உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர், மனநலம் குன்றியோர் என பல பிரிவுகளாகப் பிரித்து காப்பீடு வழங்குகிறது இன்ஷூரன்ஸ் துறை.

பிரீமியம் எவ்வளவு?

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ் வழங்குவதில் அதிக ரிஸ்க் இருப்பதாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கருதுவதால் பிரீமியம் தொகை அதிகமாக இருக்கும். பொதுவாக, டிரெடிஷனல் பாலிசிகளில், உடல் பாதிப்பின் சதவிகிதத்தைப் பொறுத்து பிரீமியம் தொகை இருக்கும். மருத்துவர் பரிசோதனை செய்து எவ்வளவு சதவிகிதம் பாதிப்பு இருக்கிறது என்று சான்றிதழ் கொடுப்பார். அதைப் பொறுத்தே பிரீமியம் தொகை இருக்கும். 40-50% பாதிப்பு என மருத்துவர் சான்றிதழ் அளித்தால் சாதாரணமாக வசூலிக்கும் பிரீமியம் தொகையே வசூலிப்பார்கள். இதுவே, இரண்டு கண்களிலும் பார்வையில்லை என்றால்  100% மாற்றுத் திறனாளியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பிரீமியம் சுமார் 20-30% வரை அதிகமாக இருக்கும். இது மாதிரியே மற்ற குறைபாடுகளுக்கும் பிரீமியம் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.

டிரெடிஷனல் பாலிசி!

40-50% மட்டுமே பாதிப்பு, போலியோ மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பணியில் இருக்கிறார் என்றால் அனைத்து பாலிசிகளுமே கிடைக்கும். எண்டோமென்ட், மணிபேக், டேர்ம் பாலிசி போன்றவை சாதாரண பிரீமியம் கட்டணத்திலேயே கிடைக்கும். இதுவே 100% பாதிப்பில் உள்ளவர்களுக்கு டேர்ம் பாலிசி கிடைக்காது. எண்டோமென்ட் பாலிசிகளே கிடைக்கும். அதுவும் குறைந்த காப்பீட்டுத் தொகையிலேயே கிடைக்கும். பிரீமியம் தொகையும் அதிகமாக இருக்கும்.


சிறப்பு பாலிசி!

மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக சில இன்ஷூரன்ஸ் திட்டங்களை தருகின்றன எல்.ஐ.சி., பஜாஜ் அலையன்ஸ், மேக்ஸ் புபா, யு.டி.ஐ. உள்ளிட்ட சில நிறு வனங்கள். எல்.ஐ.சி. நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று ‘ஜீவன் ஆதார்’ என்று தனியாக ஒரு பாலிசி வைத்துள்ளது. இது எண்டோமென்ட் பாலிசி. இதில் பிரீமியம் தொகை சராசரிக் கட்டணத்தைவிட 10% குறைவு. அதுபோக பிரீமியம் வெய்வர், டேர்ம் ரைடர், கிரிட்டிக்கல் இல்னஸ் உள்ளிட்ட ரைடர்களும் உள்ளன.

இந்த வகை இன்ஷூரன்ஸ் பற்றி வெல்த்டிரெயிட்ஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசகர் அபுபக்கருடன் பேசினோம்:

”யு.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யு.டி.ஐ. யூலிப் திட்டம் ஒன்றை நடத்துகிறது. பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தத் திட்டத்தை வழங்குகிறது. லைஃப் கவர், எல்.ஐ.சி-யுடன் இணைந்து (குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸில்) 15 லட்சம் வரை தருகிறது. பர்சனல் ஆக்ஸிடன்ட் கவர், ஹாஸ்பிட்டல் கேஷ் பாலிசி, கிரிட்டிக்கல் இல்னஸ் கவர் உள்ளிட்டவற்றையும் வழங் குகிறது.

எல்.ஐ.சி. நிறுவனம் எல்.ஐ.சி. ஜீவன் ஆதார், ஜீவன் விஸ்வாஸ் உள்ளிட்ட லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. இதில் முதலீடு செய்யும்போது மாற்றுத் திறனாளிகளுக்கு 80-யு பிரிவில் 50,000 ரூபாய் வரை வருமான வரிச் சலுகை கிடைக்கும்.. இதுவே 100% மாற்றுத் திறனாளியாக இருந்தால் ஒரு லட்சம் வரை இந்தப் பிரிவில் வருமான வரிச்சலுகை கிடைக்கும்.

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் எபிலிட்டி இன்ஷூரன்ஸ் என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று லைஃப் இன்ஷூரன்ஸ், மோட்டார் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி களைத் தருகிறது.

சாதாரணமானவர்கள், அவர் களைச் சார்ந்து இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். அப்படி எடுக்கும்போது அவர் ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருந்தால், அதற்கு அவர் கட்டிவரும் பிரீமியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் மாற்றுத் திறனாளிக்குரிய இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத் துக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும்” என்றார்.

Source : http://www.vikatan.com/article.php?mid=6&sid=110&aid=3710


Leave a comment

Share Your Thoughts...